> குருத்து: April 2012

April 24, 2012

தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க
நக்சல்பாரியே ஒரே மாற்று!

மே நாள் பேரணி ஆர்ப்பாட்டம்!

இடம் : பூவிருந்தவல்லி
கல்லறை பேருந்து நிறுத்தம் அருகில்!
காலை 10 மணி

தலைமை : துவக்கி வைத்தல் :

தோழர் அ. முகுந்தன்,
மாநிலத்தலைவர், பு.ஜ.தொ.மு.

சிறப்புரை :

தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநில அமைப்புச் செயலாளர்,
பு.ஜ.தொ.மு

அனைவரும் வருக!

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

April 15, 2012

போராளித் தாய் தன் மகளுக்கு எழுதிய கடிதம்!


லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று நிகாரகுவா. 1979 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள், நிகராகுவாவின் சர்வாதிகாரியும், அமெரிக்க உதவியுடன் ஆட்டம் போட்டவனுமாகிய அனஸ்டூடசியோ சமோசாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு மக்கள் வெற்றி கண்ட மகத்தான நாள். இத்தேசியப் புரட்சியில் பங்கு கொண்ட இடானியா என்ற பெண் போராளி 8.3.1979 தேதியில் தனது மகளுக்கு எழுதிய கடிதம் கீழே தரப்படுகிறது. 16.4.1979 அன்று சமோசாவின் இராணுவத்தால் கொல்லப்பட்டபோது இப்போராளியின் வயது 26.

இடானியாவின் கடிதம்!

எனது அன்பு மகளே,

எல்லா இடங்களிலும் மக்களுக்கு
இது ஒரு முக்கியமான நேரம்.
இன்று நிகராகுவாவில்,
நாளை பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில்,
பிறகு உலகம் முழுவதும்.

புரட்சி
ஒவ்வொருவராலும் தரமுடிந்த அனைத்தையும் கோருகிறது.
நமது மனசாட்சியும்தான்.

தனி மனிதர்களான நாம் பிரத்யேகமாகச் செயல்பட்டு
இந்த உருவாக்கத்தில் இயன்றளவு,
உதவிடவேண்டி வலியுறுத்துகிறது.

விரைவிலேயே ஒருநாள்
சக மனிதர்களைப் போல வளர்ந்து முன்னேறி,
விரோதிகளாக அல்லாமல், சகோதர சகோதரிகளாக
சுதந்திரமான சமூகத்தில் வாழ்வது,
உனக்கு சாத்தியமாகுமென்று நம்புகிறேன்.

அப்போது உன்னுடன் கைகோர்த்து வீதிகளில் செல்லும்போது
எல்லோரும் புன்னகைப்பதை குழந்தைகள் சிரிப்பதை
பூங்காக்கள் நதிகளையெல்லாம் பார்க்க விரும்புகிறேன்.

நமது மக்கள் மகிழ்ச்சியான குழந்தைகளாக வளர்வதையும்,
புதிய மனிதர்களாகவும்
எங்குமுள்ள மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை
உணர்ந்தவர்களாக மாறுவதையும் கண்ணுற்ற நாம்
மகிழ்ச்சியுடன் புன்னகை செய்வோம்.

நீ அனுபவிக்கப் போகும் அமைதியும், சுதந்திரமும் கொண்ட
சொர்க்கத்தின் மதிப்பை நீ அறிந்து கொள்ள வேண்டும்.
நான் ஏன் இதைச் சொல்கிறேன்?

ஏற்கனவே நமது மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.
சமூகத்தின் மீதும், சுதந்திரத்தின் மீதும், அமைதியின் மீதும்,
தமக்குள்ள ஆழ்ந்த அன்பினால்,
நாளைய தலைமுறையினருக்காகவும்,
உன்னைப் போன்ற குழந்தைகளுக்காகவும்
தங்கள் ரத்தத்தை தந்துவிட்டார்கள்,
மிக்க விருப்பத்துடன்.

நமது அழகான நிகராகுவாவின்
எத்தனையோ ஆண்களும், பெண்களும், குழந்தைளும்,
அடக்குமுறையிலும், அவமானத்திலும், வேதனையிலும்
துடிப்பது போல இனி ஒரு போதும் துடிக்கக் கூடாது
என்பதற்காக
அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துவிட்டார்கள்.

ஒருவேளை நான் இவற்றையெல்லாம்
உன்னிடம் நேரில் சொல்லமுடியாமல் போகலாம்.
வேறொருவர் சொல்வதும் முடியாது போய்விடலாம்,
என்பதால் உன்னிடம் சொல்கிறேன்.

அன்னை என்பவள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவள் மட்டுமல்ல,
எல்லாக் குழந்தைகளும் தனது கருப்பையிலிருந்து தோன்றியவர்கள் போல,
எல்லா மக்களின் வலிகளையும்
அன்னை என்பவள் நன்கு அறிவாள்.

ஒரு நாள்
நீ
மனித குலத்தின் மீது பேரன்பு கொண்ட
உண்மையாக பெண்ணாக உருவாக வேண்டும்
என்பதே என் விருப்பம்.

நீதியை யார் எப்போது குலைக்க முயன்றாலும்,
அதை எதிர்த்து நின்று காப்பது எப்படி என்று
உனக்கு எப்போதும் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி நீ மாறவேண்டுமானால்,
நாம் நாட்டுப் புரட்சியின் தலைவர்களும்,
பிறநாட்டுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களும்
எழுதிய புத்தகங்களை
நீ படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

அனைத்திலும் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தி
அதன் மூலம் வளர்ச்சியைத் தொடர வேண்டும்.
நீ இதைச் செய்வாய்!
உன்னால் முடியுமென்று எனக்குத் தெரியும்.

உனக்கென
வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும், வெற்றுப்போதனைகளையும்
விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை.

உனக்கென நான் விட்டுச்செல்ல நினைப்பது
வாழ்க்கை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை.
என்னுடையதையும்
(அதுதான் சிறந்தது என்று நான் நினைக்கவில்லை என்றாலும்)
எனது சான்டினிஸ்டா சகோதர – சகோதரிகளுடையதையும்
உனக்கு விட்டுச் செல்கிறேன்.
அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று
நீ கற்றுக் கொள்வாயென்று எனக்குத் தெரியும்.

சரி, என் குண்டுப்பெண்ணே,
உன்னை மறுபடியும் பார்க்கும் பேறு எனக்கு கிடைத்தால்?
அதுகூட சாத்தியம்தான்.
வாழ்க்கை பற்றியும் புரட்சி பற்றியும் நாம் நீண்டநேரம் பேசுவோம்.

நமக்குக் கொடுக்கப்படும் செயல்களை
கடினமாக உழைத்து நிறைவேற்றுவோம்.
கிடார் வாசித்து, பாட்டுப்பாடி ஒன்றாக விளையாடுவோம்.
ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்வோம்.

வா,
பூவையும் சுதந்திரத்தையும் போன்ற
உன் அழகு முகத்தை எனக்குக்காட்டு!

உன் சிரிப்பையும் நமது யதார்த்தத்தையும் பிணைத்து
நான் போராடுவதற்கான சக்தியைக்கொடு!

தினமும் உன்னைப்பற்றியே நினைக்கிறேன்.
நீ எப்படியிருப்பாய் என்று கற்பனை செய்கிறேன்.

எப்போதும் உன் மக்களை
மனித குலத்தை நேசி!
உன் அம்மாவின்
அன்பு முழுவதும் உனக்கே!

இடானியா.

“என்றென்றைக்குமான வெற்றி கிட்டும் வரை
சுதந்திரத் தாய்நாடு அல்லது வீரமரணம்”

(“சான்டினோவியப் புதல்விகள்” ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பு: அமரந்தா.) – புதிய கலாச்சாரம், ஜனவரி’ 2000

இருபத்தி ஆறு வயது போராளி இடானியா தனது மகளுக்கு எழுதிய கடிதம்தான் இது. கடிதத்தை கவிதை வடிவில் மாற்றியிருக்கிறோம். வாழ்வின் முழுமை பற்றியும், கடமை பற்றியும், தனிப்பட்ட நேசத்தைக் கூட சமூக உறவின் வெளிச்சத்தில் நேசிக்கும் இந்த இளம் போராளியின் வார்த்தைகளும், வரிகளும் செயலற்றவர்களின் பாதுகாப்பான இதயத்தை உலுக்குகிறது. அவளது சிறிய குண்டுப் பெண்ணுடன் கிடார் வாசித்து புரட்சியின் கடமைகளை நிறைவேற்ற நினைக்கும் எதிர்பார்ப்பு கண்ணீரை வரவழைக்கிறது. ஆம். நல்ல கவிதைகள் கவிதைகளாத்தான் எழுதப்பட வேண்டுமென்பதில்லை. அது போராட்டத்திலிருக்கும் வாழ்க்கையிலிருந்தும் பிறக்கலாம்.

நன்றி : வினவு

April 12, 2012

தானே புயலின் அறுவடை ‍- தங்கர்பச்சான் -ஆவணப்படம்


"படையல் போட்ட சாமியெல்லாம் பார்க்காம போயிருச்சே!
காவல் காத்த சாமியெல்லாம் கைவிட்டு போயிருச்சே!
தானே புயல் அடிச்ச அடி தலைமுறையை சாய்ச்சிருச்சே!"

என படத்தின் இறுதியில் ஒப்பாரியாய் பாடும் குரல் நம்மை உலுக்குகிறது.

மணிக்கு 136 கி.மீ வேகத்தில் வீசிய தானே புயல், தமிழகத்தின் கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கடலோர பகுதிகளையும், பாண்டிச்சேரியின் கடலோரங்களையும் தாக்கி, உணவு, உடை, குடிநீர், சாலை வசதி, மின்சாரம், படகுகள் மரங்கள், விளைநிலங்கள் என அனைத்தையும் சூறையாடி போய்விட்டது. குறிப்பாக இந்த படத்தில், கடலூர் மாவட்டத்தின் சில கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்பை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான்.

பார்க்கும் இடமெல்லாம், பசுமையோடு கனிகளை தாங்கி நின்ற மரங்கள், இன்று வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. மக்கள் சோகம் அப்பிய முகங்களோடு அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

"இந்த மரங்களை எங்கள் பிள்ளைகளைப் போல நீருற்றி வளர்த்தோம். எல்லா பிள்ளைகளையும் தானே புயல் கொன்றுவிட்டது. எங்களை மட்டும் உயிரோடு விட்டுவிட்டது. சுனாமியை போல எங்களையும் சேர்த்து கொன்றிருக்கலாம். இப்பொழுது நடைபிணங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்" என விரக்தியில் பேசுகிறார்கள் மக்கள்.

இத்தனை ஆண்டு காலம் முந்திரியையும் முக்கனிகளான மா, பலா, வாழை தந்து நம்மை மகிழ்வித்த அந்த மக்கள் இன்று கண்ணீருடன் வாழ வழியறியாமல் நிற்கிறார்கள்.

இந்த படத்தை எடுத்ததின் நோக்கம் ஆளும் மத்திய, மாநில அரசுகளிடம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முன்வைப்பதற்காக எடுத்திருக்கிறார். படத்தின் இறுதியில் அதனால் தான், அரசுகள் துயர் துடைக்கும் என்ற நம்பிக்கையை முன் வைக்கிறார்.

இப்படி அழுது, அரசிடம் மன்றாடி கோரிக்கை வைத்தால், ஆட்சியாளார்கள் மனம் இரங்கிவிடுவார்களா என்ன! போராடுவதின் மூலம்தான் நமக்கான உரிமைகளை பெற்றோம் என்பதுதானே கடந்த கால வரலாறு! தானே புயலின் பாதிப்புக்கு மட்டும் விதிவிலக்கா என்ன! தானே புயலின் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மாநில அரசு 5800 கோடி பாதிப்பு என இழப்பீடு கேட்டால், 500 கோடியை மட்டும் தந்துவிட்டு, அமைதியாக இருந்துவிட்டது.

அந்த மக்களுக்கு தேவை கருணையோ, அற்ப நிவாரணமோ அல்ல! மறுவாழ்வு. ஆனால், ஜெ. "கருணை" உள்ளத்துடன், அற்ப நிவாரணத்தொகையை அறிவித்துவிட்டு, "உலக சாதனை" படைத்துவிட்டதாக சட்டமன்றத்தில் பெருமை பொங்க பேசியுள்ளார்.

படத்தில் அந்த மக்களே அந்த கேள்விகளை இயல்பாய் எழுப்புகிறார்கள். புயலுக்கு பிறகு, அந்த மக்களின் குடிநீர் தேவைக்கே நடந்தோ, மிதிவண்டியிலோ இரண்டு கிமீ. தூரம் போய் நீர் கொண்டுவருகிறார்கள். அப்படி நீர் கொண்டு வரப்போன, ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்து பாதிப்பு ஏற்பட்டு தாயும், குழந்தையும் செத்தே போகிறார்கள். இப்படி அத்தியாவசிய நீர் தேவைக்கே அலையும் பொழுது, அரசு மரக்கன்றுகளை தருகிறது. அதற்கு தண்ணீர் எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்புகிறார்கள்.

"அம்மா! தாயே! என தேர்தல் சமயத்தில் எங்கள் காலை பிடித்தார்கள். இப்பொழுது அவர்கள் யரையும் காணவில்லை" என கோபமாய் கேட்கிறார்கள். தானே புயல் வந்துபோய்விட்டது. அந்த மக்கள் பிழைப்புக்காக, கூலித்தொழில் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு புயலின் பாதிப்பிற்கே வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தராத இந்த அரசுகளா நாளை அணு உலை வெடிப்பின் பொழுது, நம்மையெல்லாம் பாதுகாக்கப்போகிறார்கள் என போராடும் இடிந்தகரை மக்கள் கேட்பது இயல்பான கேள்வி.

படத்தின் துவக்கத்தில் "நாங்களே நொந்து போய் கிடக்கோம். அவனவன் போட்டோ பிடிக்க கிளம்பி வந்துட்டீங்க" என கோபமாய் அரிவாளுடன் ஒரு விவசாயி விரட்டுவார். அந்த கோபம் தான் போராட்டத்தை உருவாக்கும். அந்த போராட்டம்தான் நம்மை காக்கும். பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வுரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாம் இணைந்து நிற்போம்.

*****

நேரம் : 35 நிமிடங்கள் இசை : பரத்வாஜ்

விலை : ரூ. 100

நன்றி : மகா

தொடர்புடைய பதிவுகள் :

தானே புயல் பேரழிவு : தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு - வினவு

April 10, 2012

பெண்ணுரிமைப் போராளி!


"மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர் " என்று ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் படித்த ஞாபகம் எனக்கு.

தேவதாசி முறை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை (இசை வேளார்கள்) கோவிலுக்கு நேர்ந்து, பொட்டுக்கட்டும் முறையாகும். அதாவது இச்சமூகப் பெண்களை ஒரு குறிப்பிட்ட வயதில் கோயிலுக்கு நேர்ந்து விடுவதால், இவர்கள் தேவர்களுக்கு அடியார் (தேவரடியார். அதாவது பெரியாரைப் போல் பச்சையாகச் சொல்வதென்றால் 'இறைவனின் வைப்பாட்டி'கள் (தேவதாசி), இப்பெண்கள் கடவுளின் பெயரால் கோவில் சார்ந்த பூசாரிகள் மற்றும் அந்தந்த ஊர் சார்ந்த பணக்கார ஆண்களுக்கு ஆசைநாயகியாக வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டவர்கள். இப்பெண்கள் திருமணம் செய்து கணவரோடு வாழும் உரிமை மறுக்கபப்ட்டவர்கள். மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும் ஆரம்பத்தில் தேவதாசியாக ஆக்கப்பட்டவர் தான்.

தோழர் ஜீவசுந்தரியின் தேடுதலிலும், கடும் முயற்சியாலும் உருவான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வரலாற்றைக் கூறும் இந்த நூல் அம்மையாரைப் பற்றி பல அரிய தகவல்களைத் தரும் அற்புத தகவல் களஞ்சியம் என்றால் அது மிகையல்ல.

பெரியார் நடத்திய சுயமரியாதை திருமணங்களுக்கும் முன்னோடியாக ராமாமிர்தம் ‍- சுயம்புபிள்ளை திருமணம் கோவிலில் நெய் விளக்கேற்றி சத்தியம் செய்ததோடு மிக எளிமையாக நடந்தேறி இருக்கிறது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தனது பெயரை ஆ. இராமமிர்தம் என தனது வளர்ப்புத்தாயின் (ஆச்சிக்கண்ணு) முதல் எழுத்தையே பயன்படுத்தி உள்ளார்.

1938ல் நடைபெற்ற இந்தி திணிப்பு போராட்டத்தில் திருச்சி உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள் 577 மைல்கள் நட்ந்தே சென்றுள்ளார். பயணத்தின் பொழுது 87 பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

இந்துமத மூட நம்பிக்கைகளை எதிர்த்து, தேவதாசி முறைக்கு எதிராக நடகம் நடத்தி வந்தார் மூவலூர் அம்மையார். இந்துமத வெறியர்கள் நாடக மேடை ஏறி அவரது கூந்தலை அறுத்து எறிந்தனர். இதற்கெல்லாம் அஞ்சாத அம்மையார் தன் பிறகு தனது கொள்கைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினாரே தவிர நிறுத்தவில்லை. இந்து சனாதனிகளுக்குப் பதில் சொல்லும்விதமாக தன் இறுதிக்காலம் வரை தனது முடியை கிராப் செய்தே வாழ்ந்திருக்கிறார்.

தோழர்கள் குஞ்சிதம் ‍ குருசாமி, சிவகாமி சிதம்பரனார் உட்பட 80க்க்கும் மேற்பட்ட சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.

'தேவதாசி ஒழிப்புச் சட்டம்' கொண்டு வர போராடிய டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் அளவிற்கு மூவலூர் அம்மையார் பெயர் பதிவாகவில்லை என்கிற தோழர் ஜீவசுந்தரியின் ஆதங்கம் நியாயமானதே.

மூவலூர் அம்மையார் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் கவுரவ மாஜிஸ்ட்ரேட்டாக பணியாற்றியுள்ளார்.

மூவலூர் அம்மையார் ஆதரவற்ற பெண்களை எங்கு பார்த்தாலும் வீட்டிற்கு அழைத்துவந்துவிடுவாராம். அதன்பின் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைப்பதையும், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதையும் ஒரு நிரந்தர கடமையாகவே செய்து வந்துள்ளார்.

1956ம் ஆண்டு திமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை இயக்க்திற்குப் பாடுபட்ட பெண்ணுரிமைப் போராளி மூவலூர் அம்மையாருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

அது மட்டுமல்ல.. தன் வாழ்நாளில் யாரிடமும் சிபாரிசுக்குச் செல்லாத அண்ணா அவர்கள், அம்மையாரின் பேரனுக்காக சிதம்பரம் பல்கலைத் துணைவேந்தரிடம் சிபாரிசு செய்துள்ளார்.

1936ல் 'தாசிகள் மோசவலை' அல்லது 'மதி பெற்ற மைனர்' என்ற நாவலையும், அறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு வார இதழில் 1945ஆம் ஆண்டு 'தமயந்தி' என்ற தொடர்கதையையும் எழுதியுள்ளார்.

தோழர் ஜீவசுந்தரியின் படைப்பைப் படிக்கும் பொழுது அவரது முயற்சியும், உழைப்பும் நூல் முழுமையிலும் தெரிகிறது. இந்த நூல் படிப்பதற்கு எளிமையாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. இந்த அற்புத நாவலைப் படைத்த தோழர் ஜீவசுந்தரிக்கு வாழ்த்துக்கள்!

மூவலூர் அம்மையாரின் வாழ்க்கையை சொல்லும் இந்த நூல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கோ அல்லது கல்லூரி மாணவர்களுக்கோ பாடப்புத்தகமாக அமைவதற்கு முழுத்தகுதி பெற்றிருக்கிறது.

‍- தோழர் பொற்கொடி
தோழமை மார்ச் 2012 இதழிலிருந்து...

பக்கம் : 192
விலை ரூ. 120

வெளியீடு :

அரிவை
(பெண்களுக்கான நூல் வெளியீடுகள்)
27, பாரதி முதல் குறுக்குத்தெரு,
செல்லியம்மன் நகர், அம்பத்தூர்,
சென்னை ‍ 58

பேச : 97899 13810

April 4, 2012

மின்கட்டண உயர்வை ரத்துசெய் : ம.கஇ.க ஆர்ப்பாட்டம், ஜெ. கொடும்பாவி எரிப்பு!


மத்திய அரசும், மாநில அரசும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் மானியங்களை அள்ளி இறைத்து செல்லப்பிள்ளைகளாக நடத்துகிறார்கள். அதனால் வரும் சுமைகளை மக்கள் மீது சுமத்தி வருகிறார்கள்.

குறிப்பாக, ஜெ. பேருந்து கட்டணத்தையும், பால் விலையையும் அநியாயமாக சமீபத்தில் உயர்த்தினார். இப்பொழுது மின்சார கட்டணத்தையும் தாறுமாறாக ஏற்றியிருக்கிறார்.

இதைக் கண்டித்து, மின்சார உயர்வை ரத்துசெய்யக்கோரி சென்னை சைதையில் இன்று மாலை 4 மணியளவில் மக்கள் கலை இலக்கிய கழகமும், அதன் தோழமை அமைப்புகளும் எழுச்சியோடு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஜெ.வின் கொடும்பாவி கொளுத்தினார்கள். 250 தோழர்களுக்கும் மேலாக கலந்துகொண்டார்கள். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவ வேண்டும்.