> குருத்து: October 2017

October 21, 2017

தீப ஒளி திருநாள்!


எப்பொழுதும்
பற்றாக்குறைகளுடன்
போராடும் அம்மாவுக்கு
பண்டிகை வந்தாலே பதட்டமாகிவிடும்!

ஐந்து குழந்தைகளுடன்

பொறுப்பை தட்டிகழிக்கும் அப்பாவோ
"எல்லாவற்றையும்
துணைவியார் பார்த்துக்கொள்வாள்!" என
நழுவிக்கொள்வார்.

வாராவாரம் சிறுக சிறுக சேமித்து
கட்டிய பண்டுதான்
பலகாரங்களுக்கு பொருட்கள் தரும்!

குறைந்தபட்ச வட்டி கடனில்
சொசைட்டி தான் அனைவருக்கும்
துணி வழங்கும்!

தைக்க, இதர செலவுகளுக்கு
வட்டிக்கு வாங்கும் கடன் தான் சமாளிக்கும்!

எங்கு சென்றாலும்
அம்மாவுக்கு கடைக்குட்டி
நான் தான் துணை!

அம்மா எதிர்கொள்ளும் - அத்தனை
சங்கடங்களுக்கும்
சிரமங்களுக்கும்
கண்ணீருக்கும்
நானே மெளன சாட்சி!

பண்டிகையில் செய்யப்படும்
இனிப்புகள்
எப்போதும் அம்மாவிற்கு
இனிப்பதேயில்லை!
அம்மாவிடம் பட்டாசு கேட்க
வாய் வருவதேயில்லை

October 20, 2017

இவான் - அறிமுகம்


ரசிய நாவல்களின் வரிசையில் மிகவும் பிடித்தமான நாவல். 100 பக்கங்களை கொண்டது.

இரண்டாம் உலகப் போரில் இட்லரை வீழ்த்தி உலகத்தை பாசிசத்திலிருந்து காப்பாற்றியதற்காக ரசியா கொடுத்த விலை இரண்டு கோடி பேர். அதில் ஒருவன் தான் இவான்.

ரசியாவின் எல்லைப்புறத்தில் நதியின் கரைகளில் நடந்த உக்கிரமான போரில், நாஜிப்படை இருக்கும் பகுதிகளில் உளவு பார்க்கும் இவான் ஒரு சிறுவன்.
போரில் தன் குடும்பத்தை தொலைத்தவன். எதிரிகளை வீழ்த்த, நடுங்கும் கடும்குளிரை தாங்குவது, சிக்கினால் தன் உயிர் போய்விடும் என தெரிந்தும் ஈடுபடும் துணிவு. ராணுவ ஒழுங்கை கறாராக கடைப்பிடிக்கும் பண்பு எல்லாம் பிரமிக்கத்தக்கவை.

இவானை போன்ற உறுதி கொண்டவர்களால் தான் இட்லர் வீழ்த்தப்பட்டான். சோர்வாக இருக்கும் பொழுதெல்லாம் இவானை தான் நாடுகிறேன்.
 
#50_Books_Challenge_2