> குருத்து: November 2017

November 17, 2017

தீரன் - ஒரு கேள்வி

நெடுஞ்சாலையோரம் உள்ள தனியாக உள்ள வீடுகளில், கொடூரமாக கொலைகள் செய்து, கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல்.

ஒரு டிஎஸ்பி தனது குழுவினருடன் தொடர்ந்து உழைத்து கும்பலை பிடிப்பது தான் கதை.
நேர்த்தியான திரைக்கதை. எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

என் கேள்வி. அந்த கொடூர கும்பல் தற்செயலாக, விசாரணயில் ஈடுபட்டிருக்கும் போலீசு வீட்டிலும் கொலை, கொள்ளை செய்கிறது.
ஒருவர் தன் கடைமையை விடாப்பிடியாக செய்வதற்கு, தன் சொந்த இழப்பு இருந்தால் தான் செய்யமுடியுமா என்ன? படத்தில் செண்டிமெண்டுக்காக இப்படி தொடர்ந்து செய்கிறார்கள்.
பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபடுகிற கதாபாத்திரங்களை கூட தனிப்பட்ட இழப்புகளின் பாதிப்பால் தான் செயல்படுகிறார்கள் என்கிற கருத்தை தொடர்ந்து திரைப்படங்களில் செய்து வருகிறார்கள். உதாரணமாக பல படங்களை சொல்லலாம்.

இப்படி சித்தரிப்பது மிக அபத்தம்!  சமூக ஏற்றத்தாழ்வுகளையும், கோளாறுகளையும்  புரிந்துகொண்டு அதை சரி செய்யும் நோக்கத்தில் பலர் சமூக செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களை எல்லாம் தனிப்பட்ட இழப்புகளினால் தான் இப்படி ஈடுபடுகிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவைக்குமா? இல்லையா?  தொடர்ந்து திரைப்படங்களில் சித்தரிப்பு மூலம் சில விசயங்களை அபத்தமாக புரிந்துகொள்கிறோம் என்பதை படத்திலேயே ஒரு காட்சி வைத்திருப்பார்கள்.

November 14, 2017

கம்யூனிசமும் குடும்பமும்! - புத்தக அறிமுகம்

புத்தகத்திலிருந்து… சில  பகுதிகள்...
“தன் தேவைகளைப் பெறவும், நிறைவேற்றிக் கொள்ளவும், ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” (பக்கம் 7 )
“அவர் தன் கணவருக்கு மனைவியாக, குழந்தைக்குத் தாயாக, முதலாளிக்குத் தொழிலாளியாக என்று தன் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் வியர்வையாய் சிந்துகிறார். ஆலைத் தொழிலாளியாகட்டும், அச்சகம் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம் ஆகட்டும், அங்கே வேலை செய்யும் தன் கணவருக்கு சமமாக வெளியே உழைத்துவிட்டு, பின் தன் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு முதலாளித்துவமானது பெண்களால் தாங்க முடியாத பாரத்தை அவர்கள் மேல் சுமத்தியிருக்கிறது”  (பக்கம் 11)
“உழைக்கும் பெண்கள் தமக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரங்களிலும் சமையல் வேலைகளால் அவதிப்படுவதை விடுவித்து, பொது உணவு விடுதிகளையும் சமூகச் சமையற்கூடங்களையும் கம்யூனிச சமுதாயம் ஏற்படுத்திக் கொடுக்கும்” (பக்கம் 16)
“அப்படிப்பட்ட பழைய குடும்ப முறையே பாட்டாளி வர்க்க விடுதலைக்கான உணர்வை இறுக்கித் திணறடிக்க வல்லது என்றும் உழைக்கும் ஆண், பெண்களிடையே எழுந்து வளரும் புரட்சி உணர்வை பலமிழக்க வைக்கும் என்றும் முதலாளிகள் நன்கு அறிவார்கள். குடும்பப் பராமரிப்பிற்காகவே உழைப்பாளர்கள் முதலாளிகளுடன் சமரசம் செய்துகொள்கின்றனர். குழந்தைகள் பசியால் வாடும் பொழுது முதலாளியின் எத்தகைய கொடுமையான நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பெற்றோர் அடிபணிந்து விடுகின்றனர்” (பக்கம் 19)
“வீட்டு வேலைகளிலிருந்து விடுபட்டாலும் கூட குழந்தைப் பராமரிப்பு என்ற ஒன்று இருக்கிறதே என்று நீங்கள் வாதிடலாம். இங்கும் சோவியத் அரசே இந்தப் பொறுப்பை ஏற்கும்” (பக்கம் 16)
“முதலாளித்துவ உலகில் திருமணம் என்பது உண்மையிலேயே துன்பச் சங்கிலியாக இருக்கிறது” பக். 21
“முன்னர் ஆண்-பெண் இருவருக்கிடையில் நீடித்த பழைய உறவுமுறை புதிய வகைப்பட்டதாக உருவாகி மாறிவருகின்றது. அந்த உறவானது அன்பான தோழமையான இரு உள்ளங்களுக்கிடையிலானதாக கம்யூனிச சமூகத்தின் இரு சம உரிமையுள்ள ஆண் பெண்ணுக்கிடையிலானதாக சுயமாக, சுதந்திரமாக ஒருவரையொருவர் சார்ந்து வாழாத இருவருக்கு இடைப்பட்ட உறவுமுறையாக இருக்கின்றது” (பக்கம் 22)
“கம்யூனிச சமூகத்தில் பெண் இனி தன்னைத்தானே நம்பி வாழ்வாளேயன்றி கணவனை நம்பி அல்ல” (பக்கம் 22)
“மேலும் ஆணும் பெண்ணும் அடிப்படையில் நேர்மையான, சுதந்திரமான, விருப்பத்துடன் கூடி வாழும் திருமணங்கள் வளரும். இதனால் விபச்சாரம் முடிவுக்கு வரும்” (பக்கம் 23)
“உழைக்கும் தாயானவள் தன் குழந்தைகளையும் மற்றவர்களது குழந்தைகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதை நிறுத்திவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் குழந்தைகள் எல்லாம் நம் குழந்தைகள், சோவியத் ரசிய உழைப்பாளர்களின் குழந்தைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” (பக்கம் 23)
“பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தால் கனவு காணப்பட்ட விண்ணுலகம் இம்மண்ணுலகிலேயே எழுந்து மலருவதை இதோ செங்கொடி அறிவித்துக்கொண்டிருக்கிறது!” (பக்கம் 24)
ஆசிரியர் குறிப்பு :
அலெக்சான்ட்ரா கொலந்தாய் 1872 -ல் பிறந்தார். 1899 -ல் ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். பின்பு, 1903 -ல் லெனினது போல்ஷிவிக் கட்சியில் இணைந்தார். 1917 புரட்சிக்கு பிறகு சமூக நலத்துறையில் மக்கள் கமிசாராக இருந்தார். சோவியத் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் பல ஐரோப்பிய நாடுகளில் சோவியத்தின் அரசியல் தூதராக பணிபுரிந்தார். பணிக்காலத்தில் கம்யூனிச உணர்வுக்கு அங்கீகாரமாக அன்று வழங்கப்பட்டு வந்த லெனின் விருது (1933), உழைப்பின் செங்கொடி விருது (1945) போன்ற விருதுகளால் கெளரவிக்கப்பட்டார்.
ரசியப் புரட்சியின் நூற்றாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில்  அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.


2011-ல் இப்புத்தகத்தின் முதல் பதிப்பை கொண்டு வந்தார்கள். இடைக்காலங்களில் தேடினாலும் கிடைக்கவில்லை. இப்பொழுது இரண்டாவது பதிப்பையும் கொண்டு வந்துள்ளார்கள்.
படியுங்கள்…
– குருத்து
(1920ம் ஆண்டில் வெளிவந்த Communism and the Family – என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.)
விலை ரூ. 20/- பக்கங்கள் : 24
வெளியீடு :

பெண்கள் விடுதலை முன்னணி,
41, பிள்ளையார் கோயில் தெரு,
மதுரவாயல், சென்னை – 600 095.
தொலைபேசி : 98416 58457
- வினவு  தளத்தில் 14/11/2017 அன்று வெளிவந்தது.

November 7, 2017

சகாயம் சந்தித்த சவால்கள் - ஒரு பார்வை!

ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் லஞ்சம் தவிர்த்து நேர்மையுடன் பணியாற்றியதால்  23 வருடங்களில், 23 முறை வேலை மாற்றல்கள்!

தரமற்ற பெப்சியை ஆய்வு செய்து, பெப்சி நிறுவனத்தை பூட்டு போட்டது; தலைமை செயலர் வரை பதறிப்போய் சகாயத்துக்கு தொலைபேசியில் பேசியது; அரசு எந்த பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளிவராமல் பார்த்துக்கொண்டது; உடனே வேறு ஊருக்கு தூக்கியடித்தது – இது ஒரு சம்பவம்!

கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலை கைது செய்ய போய், மாவட்ட ஆட்சியரான சகாயத்தின் மீதே தனக்கு கீழ் உள்ள அலுவலரையே அடித்துவிட்டார் என பொய் வழக்கு போட்டது; சகாயம் சுதாரித்து அதை சாமர்த்தியமாய் எதிர்கொண்டது!- இது ஒரு சம்பவம்!

ஒரு கட்சிக்காரர் வீட்டுவசதிவாரியத்தின் கோடிக்கணக்கான மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறார்.  சகாயம் நடவடிக்கை எடுக்கிறார். உடனே கட்சிக்காரர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை வேறு ஊருக்கு மாற்றுகிறார்.

இப்படி பல சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகிறார். கூடுதலாக, முன்பெல்லாம் அரசு அலுவலர்கள் அடிப்படை தேவைகளுக்கு லஞ்சம் வாங்கியவர்கள் இப்பொழுது கூடுதலான நுகர்வு தேவைகளுக்கு லஞ்சம் வாங்குவதாக சொல்கிறார்.   இப்பொழுது அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் லஞ்சம் வாங்குவதாக அவரே சொல்கிறார்.   இதிலிருந்து நமக்கு புரிவதெல்லாம், அரசும், அரசாங்கமும் லஞ்சத்தில்  ஊறித்திளைக்கிறது.  சகாயம் மாதிரி ஆட்கள் எல்லாம் லட்சத்தில் ஒருவர் என சொல்லிவிடலாம்.

என் 10 ஆண்டு கால அனுபவத்தில் 30 வருங்கால வைப்புநிதி (PF Enforcement officers) அதிகாரிகளை பார்த்திருப்பேன். ஒரு ஆள் கூட கை சுத்தமான ஆள் இல்லை. அதே போல இஎஸ்ஐ 30 அதிகாரிகளில் கை சுத்தமான அதிகாரி ஒருவரை மட்டுமே சந்தித்தேன். அவர் பெயர் துரைராஜ்.  அதே போல விற்பனை வரி துறையில் ஒரு நேர்மையான அதிகாரி கூட பார்த்ததில்லை. இதே போலவே கலால் வரி துறையிலும்!

இந்த அரசை ஆளும் வர்க்கம் .இயக்கிக்கொண்டிருக்கிறது என சொன்னால், அதன் நடைமுறை என்பது, தரகு முதலாளிகளும், நிலச்சுவாந்தாரர்களும் தங்களுக்கான வேலைகளை முடிக்க அரசையும், அரசாங்கத்தையும் லஞ்சத்தின் மூலமாக தான் காரியம் சாதித்துக்கொள்கிறார்கள்.  ஆக உடைமை சமுதாயம் நீடிக்கும் வரைக்கும் லஞ்சம் நீடிக்கும் என்பது தான் யதார்த்தம்.  அதாவது மூக்கு உள்ளவரை சளி இருக்கும் என்பது தான்!

ஆக, சகாயம் தான் நேர்மையான நபர் என்பதை  பக்கத்துக்கு பக்கம் சொல்கிற பொழுதே இந்த அரசும், அரசாங்கமும் மாற்றவே முடியாத அளவிற்கு புரையோடி போய்விட்டதையும், பெரும்பாலான மக்களுக்கு எதிராக நிற்பதையும்தான் நிரூபிக்கிறது.   ஆனால், சகாயமோ இளைஞர்களை அணிதிரட்டி ’மக்கள் பாதை’ என்ற அமைப்பை உருவாக்கி, கடந்த சில ஆண்டுகளாக இந்த இத்துப்போன அரசமைப்பை மாற்றலாம் என நம்பிக்கை தந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதுதான் பெரிய நகைமுரண்.

மேலும், சகாயத்தின் பெற்றோர்களை அறிமுகப்படுத்தும் பொழுது, உபகாரம் பிள்ளை என குறிப்பிடப்பட்டுள்ளது. சகாயம் சொன்ன மாதிரி “ என்னோட ரோல் மாடல் எங்க சித்தப்பா அருளாந்து பிள்ளை” என எந்தவித தயக்கமில்லாமல் சொல்லியிருக்கிறார். சாதியக்கண்ணோட்டமும் கோளாறு தான்!

ஆனந்தவிகடன் வெளியீட்டிருக்கிறது.  விலை ரூ. 95 பக்கங்கள் : 96

நூலை எழுதிய ஆசிரியர் : கே. ராஜா திருவேங்கடம் (இப்பொழுது சன் தொலைக்காட்சியில் பல பிரபலங்களை பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்)