> குருத்து: February 2018

February 20, 2018

பிச்சைக்காரர்

சென்னை மாநகராட்சியின்
எல்லையில் உள்ளது
எங்கள் நகர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு 
அது ஒரு எளிமையான 
கெங்கை அம்மன் கோவில்!

பக்தர்களிடம் வசூல் செய்து
உட்புறத்தில்
முருகன், பிள்ளையார்  அவதரித்தனர்!

பிரார்த்தனை செய்பவர்கள் அதிகரித்ததும்
அய்யர் தோன்றினார்.
இன்னும் அதிகமானதும்
இன்னொரு அய்யரும் ஐக்கியமானார்.

கடவுள் நம்பிக்கையுள்ள 
என் அத்தையிடம்
புதிதாய் விரதநாட்கள் முளைத்தன!

பிரதோஷம், கிருத்திகை என
சிறப்பு பூஜைகள்
தவறாமல் நடைபெற்றன!
மார்கழி முழுவதும்
காலையில் பக்தி பாடல்கள் ஒலித்தன!

கடவுளுக்கு 
அசையும் சொத்துக்கள்
அசையா சொத்துக்கள் அதிகமானதும்
பதினைந்து அடிக்கு சுற்றுப்புற சுவர் எழும்பியது!
நல்ல கனமான இரும்பு கேட் வந்தது!
பெரிதாய் பூட்டும் தோன்றியது

பூக்கடை வந்தது!
விபூதி, குங்குமம்,
பூஜை பொருட்கள் விற்க 
கடையும்  வந்து சேர்ந்தது!

அன்னதானம் போடும் பொழுது
பக்தர்கள் அலைமோதினார்கள்.


எல்லாம் இருந்தாலும்
ஏதோ ஒன்று குறைவது போல
மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது!


இன்று வெள்ளிக்கிழமை.
வாசலில் செருப்புகள் 
நிறைய இருந்தன.
தை மாத குளிரில்
கண்கள் உள்ளடங்கி
ஒரு வயதானவர்
பக்தர்களிடம் இரஞ்சி கொண்டிருந்தார்.

'முழுமை' பெற்றது போல இருந்தது
கோவில்!

படம் உபயம் : இணையம்

February 7, 2018

சர்க்கஸ்!


”சனங்களைக் குஷிப்படுத்தி கைதட்டலைப் பெறத்தான் நீங்க சாகசம் செய்றீங்க, காசுக்காக அல்ல! அதனால ஆட்கள் நூற்றுக்கணக்கில் வந்தாலும் சரி, கொஞ்ச பேர் வந்தாலும் சரி, எப்போதும் அருமையாக செய்யனும்”


 #பெண் சர்க்கஸ் கலைஞர் தன் பிள்ளைகளிடம்!!

சிறுவயதில் சர்க்கஸ் பார்க்க அத்தனை ஆர்வமாக இருக்கும். சிங்கம், புலி, யானை, குதிரை என மிருகங்களைப் பார்க்கவே உற்சாகமாக சர்க்கஸ் போவோம்.

மிருகங்களை பயன்படுத்தக்கூடாது என்ற தடைக்கு பிறகு வண்ண வண்ண கிளிகளை, நாய்களை பயன்படுத்தினார்கள். இப்பொழுதும் அவைகளுக்கும் தடை போட்டுவிட்டார்கள். எதுவும் இல்லை.

சுதந்திரத்திற்காக சிந்திக்கிற, செயல்படுகிற நாம் விலங்களையும். பறவைகளையும் கூண்டுக்குள் அடைத்து வைத்து வித்தை காட்ட வைப்பது அபத்தம் தான்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, என் பெண்ணுக்காக சர்க்கஸ் போயிருந்தேன். பார்த்த சர்க்கஸை என் பெண் மறந்துவிட்டபடியால், சமீபத்தில் ஜம்போ சர்க்கஸ் (சென்னை மூர் மார்க்கெட் அருகே ) போயிருந்தோம்.

முழுக்க மனிதர்களின் சாகசம் தான். 40 அடி உயரத்தில் பறந்த படி சாகசம், நீளத்துணியினால் ஒரு ஜோடி அந்தரத்தில் ஸ்டைலான சாகசம் என ஐந்தாறு வகைகள் மிக அருமையாக இருந்தன.


ஜோக்கர்கள் எப்பொழுதும் போரடிக்காமல் பார்த்துகொள்வார்கள். இப்பொழுதோ ஜோக்கர்களே ரெம்பவும் போரடிக்கிறார்கள்.

மற்றபடி, சர்க்கஸ் கலைஞர்கள் வண்ண வண்ண உடைகளில் பளபளப்பாக வந்தாலும், சர்க்கஸ் கலை வளரவில்லை என்பது அதன் வடிவத்திலேயே தெரிகிறது. செய்த சாகசங்களே செய்யப்படுகின்றன. அதே டெண்ட் கொட்டாய் தான். புழுதியில் தான் சேர்கள் போட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் காலரி போடப்பட்டிருக்கும். கொஞ்சம் வசதியாக இருக்கும்.

கலைஞர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லாமல், ஒருவித இறுக்கத்துடன் தான் இருக்கிறார்கள். கனமான வெயிட்டை தூக்கி சாகசம் செய்த ஒரு கறுப்பின கலைஞன் கைதட்டை கேட்டு கேட்டு வெயிட்டை தூக்கி சாகசம் செய்தார். மார்கழி மாதத்திலும் அத்தனை வியர்வை!

சமீபத்தில் ஒரு சீனப் பெண்களின் ஐந்து நிமிட சர்க்கஸ் பார்த்தேன். அத்தனை துல்லியம். முகத்தில் மகிழ்ச்சி. பார்க்கவே அத்தனை சந்தோசமாக இருந்தது!
ஒருவேளை அரசு ஏதும் மானியம் கொடுத்தால் இந்த கலையை இன்னும் கொஞ்ச காலம் காப்பாற்றலாம். அரசு செய்யுமா? எல்லா பொறுப்புகளையும் கழட்டிவிட நினைக்கும் இந்த அரசு செய்ய வாய்ப்பேயில்லை.

மற்றபடி, புதிது, புதிதாய் இந்த மண்ணில் பிறக்கும், விழிகள் விரித்து ஆச்சர்யமாய் பார்க்கும் குழந்தைகள் தான் சர்க்கஸ் கலையை இன்னும் வாழவைக்கிறவர்கள் என சொல்லலாம்!